"தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி... அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.." - இபிஎஸ் பேச்சு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக தரப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அதிமுக சிப்பாய்கள் இங்கு குவிந்துள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வர போராடி கொண்டிருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா "எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகள் அதிமுக தொடரும்" என சொன்னார். இந்த கூட்டம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்ட வேண்டும். அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி அதிமுக கோட்டை என காட்ட வேண்டும். நமக்கு பலமான கூட்டணி அமையும் கவலைப்பட வேண்டாம். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் மு.க.ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வென்று, தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும்.
கூட்டணி வைப்பதன் நோக்கம் வாக்குகள் சிதராமல் அனைத்து வாக்குகளும் கிடைக்க வேண்டும் என்பதுதான். பாஜக - அதிமுகவை முழுங்கி விடும் என ஒருவர் கூறுகிறார். இது பொன்விழா கண்ட கட்சி, யாராலும் அழிக்க முடியாது. மு. கருணாநிதி அதிமுகவை அழிக்க எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் ஜெயலலிதா அதனை தடுத்து சாதித்தார். அவர் அதிக வாக்குகள் பெற்று ஆட்சி அமைத்தார். ஜெயலலிதா உயிரிழந்த பிறகு மு.க. ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் மக்களால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் ஆட்சியை தக்க வைத்தோம்.
மக்களை ஏமாற்றி 500க்கும் மேற்ப்பட்ட பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளார்கள். பெட்ரோல் விலையை குறைப்பேன் என சொன்னார்கள்.. செய்தார்களா? நூறு நாள் வேலை திட்டம் 50 நாளாக மாறிவிட்டது. மு.க.ஸ்டாலினையும் உதயநிதியையும் நம்பி கூட்டுறவு வங்கியில் நகையை அடமானம் வைத்து இழந்தததுதான் மிச்சம். மக்கள் விரோத ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது. பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என இதுதான் திமுகவின் நான்கு ஆண்டு சாதனையாக உள்ளது.
ஊழல்கள் நிறைந்தது திமுக அரசாங்கம். அதிமுக ஆட்சியில் தான் அதிக ஆரம்ப பள்ளி, உயர்நிலை பள்ளி, மேல் நிலைப் பள்ளிகள் துவங்கபட்டன. அதிமுக ஆட்சியில் தான் அதிக கல்லூரிகளும் துவங்கி வைக்கபட்டது. அன்றைக்கு இருந்த பழனிசாமி வேறு.. இனிமேல் பார்க்கபோகும் பழனிசாமி வேறு. ஏனென்றால் அப்போது முதன்முறை முதலமைச்சராக பதவியேற்றபோது மக்களால் தேர்ந்தெடுக்கபட்டு வந்தேன். என்னால் மக்களுக்கு செய்ய முடிந்ததை செய்தேன். 2026 ஆண்டு தேர்தலில் திமுக என்ற கட்சிக்கு மூடுவிழா நடத்த வேண்டும். திமுக என்ற தீய கட்சியை அப்புறபடுத்த வேண்டும்"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.