அரசு தேர்வில் முறைகேடு - உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர் கைது!
பாட்னாவில் அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோரை போலீசார் கைது செய்தனர்.
பீகார் மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் முதல் நிலைத் தேர்வு கடந்த டிச. 13-ம் தேதி நடைபெற்றது. அப்போது வினாத்தாள்களை குறிப்பிட்ட மையங்களில் மட்டும் தாமதமாகக் கொடுத்தது உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டியதோடு தேர்வை ரத்து செய்ய கோரி தேர்வர்கள் வலியுறுத்தி வந்தனர்.
தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த டிச. 30-ம் தேதி ஆணையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. பீகார் அரசின் இத்தகைய நடவடிக்கையை கண்டித்து பாட்னாவில் உள்ள காந்தி திடலில் தேர்வர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், தேர்வர்களுக்கு ஆதரவாக உரிய நீதி கிடைக்க வேண்டி பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் கடந்த 2 ஆம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
இந்த நிலையில் இன்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது ஆதரவாளர்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர். இதையடுத்து பிரசாந்த் கிஷோரை போலீசார் வலுக்கட்டாயமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இதுகுறித்து பாட்னா மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம், "போராட்டத்தில் ஈடுபட்ட ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது ஆதரவாளர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டம் சட்ட விரோதமானது. இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.