"செல்போனை கொடு"... கொலையில் முடிந்த தகராறு - விருதுநகரில் அதிர்ச்சி!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கரிசல்பட்டியில் தனியார் கல்குவாரி
செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் மதுரை பாலமேடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் (50) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். ராஜசேகரன் இன்று (ஜுன்) கல்குவாரியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஏழாயிரம்பண்ணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு போலீசார் ராஜசேகரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ராஜசேகரனை கொலை செய்தது யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதே கல்குவாரியில் மற்றொரு நபர் சந்தேகிக்கும்படி சுற்றித் திரிந்தார். விசாரணையில் அவர் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார் (58) என்பதும் கல்குவாரியில் மற்றொரு காவலாளியான பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசாரின் கவனம் மனோஜ்குமார் பக்கம் திரும்பியது. உடனடியாக போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, மனோஜ்குமாரின் செல்போன் காணாமல் போனதை அடுத்து அதனை ராஜசேகரன் (கொலை செய்யப்பட்டவர்) திருடியதாககூறி மனோஜ்குமார் அவரிடம் கேட்டார். இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது.
அப்போது, மனோஜ்குமார் ஆத்திரத்தில் ராஜசேகரனை கம்பால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் மனோஜ் குமாரை கைது செய்தனர். செல்போன் தொடர்பாக ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.