For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பன் கொலை... நாடகமாடிய சக நண்பர்கள்!

09:03 PM Jan 04, 2024 IST | Web Editor
இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பன் கொலை    நாடகமாடிய சக நண்பர்கள்
Advertisement

செங்கல்பட்டில் இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பனை கொன்று சக நண்பர்கள் நாடகமாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த அல்லானூர் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி குடிசை வீடு எரிந்து கிடந்தது.  இந்த வீட்டில் ஆண் ஒருவர் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.   காலி வீட்டு மனையில் புதியதாக போடப்பட்ட குடிசையில் தீப்பிடித்து கிடந்துள்ளார்.  இதுபற்றி தகவல் அறிந்தது வந்த ஒரத்தி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் யார்?. அந்த குடிசை வீடு யாருடையது? என்று தீவிரமாக விசாரித்து வந்தனர்.   இதில் அந்த வீடு சென்னை அயனாவரத்தை சேர்ந்த 'ஜிம்' பயிற்சியாளர் சுரேஷ் (38) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.  இதனையடுத்து அயனாவரத்துக்கு சென்று சுரேஷ் வீட்டில் விசாரணை நடத்தினர்.   அப்போது அவரது பெற்றோர் தனது
மகனை காணவில்லை என்று தெரிவித்தனர்.

எனவே எரிந்த நிலையில் கிடந்தது சுரேஷாக இருக்கலாம் என்று கருதிய போலீசார், பெற்றோரை அழைத்து வந்து உடலை காட்டினர்.  அவர்களும் எரிந்து கிடந்த உடல் தனது மகன் சுரேஷ்தான் என்று தெரிவித்தனர்.   இதனையடுத்து போலீசார், பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.  அவர்களும் உடலை பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்குகளை செய்து அடக்கம் செய்தனர்.

சுரேஷ் மரணம் அடைந்தது தொடர்பாக அவர் வசித்து வந்த அயனாவரம் பகுதி முழுவதும் கண்ணீர் அஞ்சலி என இரங்கல் போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.   இதனையடுத்து ஒரத்தி போலீசார் சந்தேக மரணம் (இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 174(4) என வழக்குப்பதிவு செய்தனர்.   மேலும் சுரேஷ் எப்படி இறந்தார்.   அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை யாரும் கொலை செய்துள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே சுரேஷ் மரணம் தொடர்பாக அவரது நெருங்கிய நண்பர்களான வேலூர் மாவட்டம்,  கலாஸ்பாளையத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (32), தாம்பரம் அடுத்த மாம்பாக்கத்தைச் சேர்ந்த கீர்த்திராஜன் (23) ஆகியோரையும் பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் இறங்கினார்.  இதற்கிடையே சுரேசுடன் வெளியில் சென்ற சென்னை எண்ணூர் அடுத்த எர்ணாவூர் கனாமி குடியிருப்பைச் சேர்ந்த டில்லிபாபு (39) என்ற பெயிண்டர் திடீரென மாயமாகி விட்டார்.

இதையும் படியுங்கள்:  கட்டணமில்லா பேருந்து எதிரொலி – தெலங்கானாவில் ஆண்கள் மட்டுமே பயணிக்கும் பேருந்து அறிமுகம்..?

இதுதொடர்பாக எண்ணூர் போலீசில் அவரது தாயார் லீலாவதி புகார் அளித்தார்.  ஆனால் இந்த புகார் தொடர்பாக போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.  இதனையடுத்து நீலாவதி ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.  அதன் பிறகும் டில்லி பாபு குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.
இதனையடுத்து தனது மகனை கண்டுபிடித்து தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் டில்லி பாபு நிலைமை என்ன என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு எண்ணூர் போலீசாருக்கு உத்தரவிட்டது.  இதன்பேரில் மாதவரம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் களத்தில் இறங்கி அதிரடி விசாரணை நடத்தினார். அவரது விசாரணையில், டில்லிபாபு பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அப்போதுதான் தீயில் கருகி இறந்தது சுரேஷ் இல்லை, டில்லிபாபுதான் என்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சுரேஷின் நண்பர்களான ஹரிகிருஷ்ணன், கீர்த்திராஜன் ஆகியோரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.   அப்போதுதான் சுரேஷ் இறக்கவில்லை என்பதும், அவர் அரக்கோணத்தில் உயிரோடு இருக்கிறார் என்பதும் தெரியவந்தது.  இதனை அறிந்த துணை ஆணையர் பாலகிருஷ்ணன் கடும் அதிர்ச்சி அடைந்தார்.   இறந்து போனதாக நாடகமாடிய சுரேஷ் அரக்கோணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மேலும் அவருடைய நண்பர்கள் கீர்த்திராஜன், ஹரிகிருஷ்ணன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.  கைதான சுரேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.  போலீசாரிடம் சுரேஷ் கூறியதாவது:-

எனது பெயரில் ரூ.1 கோடிக்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து இருந்தேன்.  அந்த பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஏமாற்றி எப்படி அபகரிப்பது என்று திட்டமிட்டோம்.   எனது நண்பர்கள் ஹரிகிருஷ்ணன், கீர்த்திராஜன் ஆகியோர் ஒரு புதுமையான திட்டத்தை சொன்னார்கள்.   நான் இறந்தால்தான் அந்த பணம் கிடைக்கும் என்றும் அவர்கள் சொன்னார்கள்.   நான் இறக்கக்கூடாது.   அதே சமயத்தில் நான் இறந்ததாக தகவல் வெளியாக வேண்டும்.

இதையும் படியுங்கள்:  சென்னையில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

அந்த திட்டத்தை செயல்படுத்தினால் பணம் கிடைக்கும். அதற்கு ஒருவர் இறக்க வேண்டும். யாரை பலி கொடுக்கலாம்  என்று யோசித்தோம்.   அப்போது எங்கள் நண்பரான டில்லிபாபுவை கொலை செய்து விட்டு நான் இறந்து போனதாக நாடகம் ஆட முடிவு செய்தோம்.   அவரை எப்படி தீர்த்துக்கட்டுவது என்று யோசித்தபோது,  அரிவாளால் வெட்டி கொன்றால் கொலை என்று ஆகிவிடும்.

எனவே அவரை எனது குடிசை வீட்டுக்கு அழைத்து சென்று தீ வைத்து எரித்துக்கொன்று விட்டால் தீ விபத்தில் அவர் இறந்ததாக காட்டி விடலாம். போலீசாரையும் நம்ப வைத்து விடலாம் என்று முடிவு செய்தோம்.  எங்கள் திட்டத்தின்படி டில்லிபாபுவை எனது குடிசை வீட்டுக்கு அழைத்து சென்றோம். வயிறு முட்ட 4 பேரும் மது அருந்தினோம். டில்லிபாபுவுக்கு அளவுக்கு மீறி மதுவை ஊற்றி கொடுத்தோம்.

அவர் குடிபோதையால் மயக்கம் அடைந்தார்.  உடனே அவரை கழுத்தை நெரித்து கொன்றோம். குடிசைக்கு தீ வைத்தோம்.   குடிசை எரிந்த விபத்தில் நான் இறந்து
போனதாக வெளியில் தகவல் பரப்பினோம். போலீசாரும் அதை நம்பினார்கள். எனது தாயாரும் கருகிய உடலை பார்த்து  எனது மகன்தான் இறந்துவிட்டதாக அடையாளம் காட்டினார்.

இந்த திட்டம் வெற்றிகரமாக அரங்கேறியது. ஆனால் போலீசார் விபத்தில் இறந்ததாக வழக்குப்பதிவு செய்யாமல், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துவிட்டனர்.  பத்திரிகைகளிலும் அதுபோல செய்தி வந்தது.   இன்சூரன்ஸ் அதிகாரிகள் விபத்தில் இறந்தால் மட்டுமே பணம் தர முடியும், ஆனால் போலீஸ் வழக்கு வேறுவிதமாக உள்ளது. எனவே பணம் தர முடியாது என்று கைவிரித்து விட்டனர். இதனால் எங்கள் திட்டம் வீணாகிவிட்டது.

ஒரத்தி போலீசார் மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் இறந்தது நான்தான் என்ற நிலை நீடித்தது.   இன்சூரன்ஸ் பணம் கிடைக்காவிட்டாலும், டில்லிபாபுவை கொன்ற கொலைப்பழி என் மீது விழவில்லை என்ற ஆறுதலோடு தலைமறைவாக வாழ்ந்தேன்.   எனது நண்பர்களும் இந்த ரகசியத்தை வெளிப்படுத்தவில்லை.

போலீசாரும் என்னை தேடவில்லை.   இந்த நிலையில் டில்லிபாபுவின் தாயார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால் நாங்கள் மாட்டிக் கொண்டோன்.   இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.   இதனையடுத்து 3 பேரும் மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags :
Advertisement