குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உடல் அரசு மரியாதையுடன் தகனம்!
அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் சில நிமிடங்களிலேயே பிஜே மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் விழுந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்தனர். இதில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் ஒருவர். அதே சமயம், விமான விபத்தில் விடுதியில் இருந்த 29 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒருவர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார். இதன்மூலம், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்தது.
இதனிடையே, விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் உடல்களை அடையாளம் காண விமான உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பரிசோதனைக்கு பிறகு 76 பேரின் உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மற்றவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி விஜய் ரூபானியின் உடல் டி.என்.ஏ. சோதனை மூலம் நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டது. தொடர்ந்து அவருடைய உடல் உள்ள சவப்பெட்டியின் மீது மூவர்ணக்கொடி போர்த்தப்பட்டு அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, விஜய் ரூபானியின் உடல் அங்கிருந்து அவருடைய சொந்த ஊரான ராஜ்கோட்டுக்கு பிற்பகலில் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மாலை ராஜ்கோட்டில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. அங்கு விஜய் ரூபானியின் உடலுக்கு குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.