For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை விமான நிலையத்தில் நாளை காலை 9 மணி வரை விமான சேவை ரத்து!

07:18 PM Dec 04, 2023 IST | Web Editor
சென்னை விமான நிலையத்தில் நாளை காலை 9 மணி வரை விமான சேவை ரத்து
Advertisement

சென்னை விமான நிலையத்தில் நாளை காலை 9 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

மிக்ஜாம் புயல் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு ஆந்திராவை நோக்கி 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது பொன்னேரி - ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடப்பதாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே நாளை மிக்ஜாம் புயல் நாளைதான் கரையை  கடக்கிறது. இதனால் நாளை அதிகாலை வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மின்சார சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு இருள் சூழ்ந்துள்ளது.

இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திலும் மழைநீர் புகுந்துள்ளதால் வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் நாசமாகியுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில் தற்போது நாளை காலை 9 மணி வரை சென்னை சர்வதேச விமான நிலையம் முற்றிலுமாக மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதோடு சென்னை வர இருந்த விமானங்களும் வேறு நகரங்களுக்கு மாற்றி விடப்பட்டுள்ளன.

Tags :
Advertisement