டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம் - குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு!
டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் குஜராத், ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், டெல்லியை நோக்கி செல்லும் பேரணியை தொடங்கின. இதன் காரணமாக அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதில் சில விவசாயிகள் உயிரிழந்தனர்.
மத்திய அரசுடன் நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மீண்டும் விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்தனர். இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடைகளை மீறி முன்னேறிச் சென்ற விவசாயிகளை போலீசாரும், துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர். போலீசார் நடத்திய தாக்குதலில் இளம் விவசாயியான சுப்கரன் சிங் உயிரிழந்தார். இதன் காரணமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விவசாயகள் நாடு முழுவதும் ரயில் மறியலில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதன்படி, விவசாயிகள் நாடு முழுவதும் மார்ச் 10 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகளின் போராட்டம் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்தப் போராட்டத்தில் குஜராத், ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில், 200 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களும், 5000 க்கும் மேற்பட்ட விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர்.