மருத்துவர் இல்லாததால் விவசாயி பலி : மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் ..!
தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 மணி நேரமாக மருத்துவர்கள் யாரும் இல்லாததால் கடலூர் மாவட்டம் மங்களூரில் பாம்பு கடித்த விவசாயி ஒருவர் பலியாகிய செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் கிராமங்கள்தோறும் ஒன்று மருத்துவர்கள் இருப்பதில்லை அல்லது தகுந்த மருத்துவ வசதிகள் இருப்பதில்லை. மருத்துவர்கள் நியமனம் குறித்த கேள்வி எழும்போதெல்லாம் ஏதோ ஒரு எண்ணிக்கையைக் கூறி மழுப்புவதில் மட்டுமே குறியாக இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.
போதிய மருத்துவ வசதிகளின்றி அப்பாவிப் பொதுமக்கள் மடிந்து வரும் வேளையில், "உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பு இது" என்று மேடைகளில் போலியாக பெருமிதம் கொள்வதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின்அவர்கள் வெட்கப்பட வேண்டும். விளம்பரத் திட்டங்களை அறிவித்து "நலம் காக்கும் ஸ்டாலின்" என்று பெயர்சூட்டி விளம்பரம் தேடுவதற்கு பதில், ஆட்சி முடியும் தருவாயிலாவது மக்கள் உயிரைப் பாதுகாக்கும் விதமாக அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் அரசு. அது ஒன்று மட்டுமே இதுவரை பல உயிர்களைக் காவு வாங்கி பாவம் புரிந்ததற்குத் தகுந்த பிராயசித்தமாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.