“பயத்தின் வெளிப்பாடு” - உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருகை குறித்த முதலமைச்சர் பேச்சுக்கு டிடிவி தினகரன் பதில்!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மதுரை புறநகர் மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அக்கட்சியின் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரை ஆலத்தூர் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் இன்று(ஜூன்.07) நடைபெற்றது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2026-தேர்தல் குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்யப்பட்டது. தொடர்ந்து டிடிவி தினகரன் செய்தியாளரை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “234 தொகுதிகளிலும் பணியாற்ற அமமுக நிர்வாகிகளின் கட்டமைப்பை சரி செய்து, வரும் தேர்தலில் மதுரையில் அமமுகவினர் போட்டியிட்டாலும், கூட்டணி கட்சி போட்டியிட்டாலும் திமுகவை வீழ்த்த திறம்பட செயல்பட கலந்து ஆலோசனை செய்து வருகிறோம். இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என பிரதமர் கூறியது சரியான முடிவு. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் தான் அனைத்து சமுதாய மக்களுக்கும் தேவையான படிப்பிலும் சரி வேலைவாய்ப்பிலும் உரிய பங்கீடு கிடைக்க ஏதுவாக இருக்கும்.
மத்திய அரசு தொகுதி மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்று தான் முடிவு எடுத்துள்ளனர். யூகங்கள் அடிப்படையில் செய்தி வருவதாக முதலமைச்சர் கூறுவது, தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடு. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் ஆட்சி திமுக, மத்திய அரசுக்கு எதிராக மாறு தட்டுவது பார்க்கும் போது வடிவேல் காமெடி பார்ப்பது போல இருக்கிறது.
மதுரைக்கு வந்த முதலமைச்சரால் என்ன நடந்தது.? அவர்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறியது தான் மிச்சம். சாக்கடையை துணியை வைத்து மூடியது தான்! முதலமைச்சரவை வரவேற்க பிரியாணி கொடுத்து லாரியில் ஆட்களை ஏற்றி வந்ததை செய்திகளில் பார்த்தேன். திமுக கூட்டணி கட்சிகளை வைத்துக்கொண்டு பாஜக தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செய்கிறது என திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.
2026 தேர்தலில் பாஜக கூட்டணியில் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம். கருணாநிதி காலத்தில் 10 ஆண்டு காலம் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் தத்தளித்து நிலையில், பாஜகவை காரணம் காட்டி ஸ்டாலின் இன்றைக்கு ஆட்சிக்கு வந்துள்ளார். சிறுபான்மை மக்கள் உட்பட அனைவரும் திமுகவின் ஆட்சியை புரிந்து கொண்டார்கள். 2026ல் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். எத்தனை முறை அமித்ஷா வந்தாலும் ஆட்சிக்கு வர முடியாது என முதலமைச்சர் கூறி வருவது பயத்தின் வெளிப்பாடு.
ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறார் என்பதை பாஜக தலைவர் தினமும் உங்களுடைய கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு எல்லா முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை அமித் ஷா சென்னை வந்தது குறிப்பிட்ட நிகழ்வுக்காக தான். நாளை மதுரை வரும் அமித் ஷா தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திக்க இருக்கலாம். அவரை சந்திக்க நான் அனுமதி கேட்கவில்லை.
ஓ.பன்னீர்செல்வம் பின்னால் சட்டமன்ற உறுப்பினர்களும்., உரிமை மீட்பு குழுவும் உள்ளது. தேர்தல் நேரத்தில் அவருக்கான முக்கியத்துவம் தெரிய வரும். அரசியலில் எந்த ஒரு முயற்சிக்குமே முற்றுப்புள்ளி கிடையாது. அதிமுக என்பது அம்மாவின் கட்சி. அம்மாவின் தொண்டர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் ஓரணியில் சேர்ந்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என்பது மட்டுமல்லாமல் யாரெல்லாம் திமுக ஆட்சி வேண்டாம் என்று முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறார்களோ? தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும்.
திமுகவில் கூட்டணி உறுதியாக தான் உள்ளது மக்கள் புறந்தள்ளுகின்றனர். ஆர்.கே. நகரில் இதே கூட்டணி தானே இருந்தது., 2026 இல் திமுக கூட்டணி சாயம் வெளுத்து விடும் உறுதியாக அந்தக் கூட்டணி வெற்றிபெற வாய்ப்பில்லை. எங்கள் கூட்டணியில் உறுதியாக பல கட்சிகள் வரும். திமுக கூட்டணி கட்சி மீது மக்களிடம் அதிருப்தி உள்ளது. கூட்டணியை எதிர்த்தாலும் வரக்கூடிய தேர்தலில் தோல்வியை சந்திக்க இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அமித் ஷா தமிழ்நாட்டில் அடிக்கடி வர இருக்கிறார் என அக்காட்சியை சேர்ந்தவர்கள் கூறி இருக்கிறார்கள். தற்சமயம் மதுரைக்கு அமித்ஷா வருகிறார்” என்றார்.