"பெட்டி பெட்டியாக கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி" - நயினார் நாகேந்திரன் பேட்டி!
திருநெல்வேலியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
“அமைச்சர் சேகர்பாபு சபரிமலைக்கு போகக் கூடியவர், நல்ல பக்தர். அவர் இருக்கக்கூடிய இடம் சரியில்லை, ஞானசேகரன் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது சரியில்லை. குற்றப்பத்திரிக்கையை சரியாக தாக்கல் செய்தால் தான் நீதி கிடைக்கும், அந்த வழக்கை சிபிஐ தான் விசாரித்து இருக்க வேண்டும்.
எங்களுடைய சந்தேகம் எல்லாம் அந்த சார் யார்? ஒரத்தநாட்டில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சென்னையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த வழக்குகள் எல்லாம் ஏன் 157 நாட்களில் விசாரிக்கப்படவில்லை. காவல்துறை தங்களது பணியை செய்வதே இல்லை. காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருக்கிறது, அந்த மொழி எந்த மொழி என்று பிரித்து பார்க்க வேண்டிய தேவை இல்லை.
வேற்றுமையில் ஒற்றுமை, அதை தான் பாஜகவும் விரும்புகிறது. தவெக தலைவர் விஜய் சொல்லி இருக்கிறார், தேர்தலில் பெட்டி பெட்டியாக பணம் இறக்குவார்கள் என்று. அந்த வகையில் இந்த முறை திமுக பெட்டி பெட்டியாக கொடுத்தாலும் தோற்பது உறுதி.
எவ்வளவு பெட்டி பெட்டியாக கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி, இந்த முறை தேர்தலில் ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். பாமகவில் இருப்பது உட்கட்சி பிரச்சனை, அது பற்றி பேச முடியாது. ஆனால், பாமக எங்களோடு கூட்டணியில் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.