For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மறைந்த அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடலுக்கு இபிஎஸ் நேரில் அஞ்சலி!

மறைந்த அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் உடலுக்கு இபிஎஸ் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
08:14 PM Jun 21, 2025 IST | Web Editor
மறைந்த அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் உடலுக்கு இபிஎஸ் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த அதிமுக எம் எல் ஏ  அமுல் கந்தசாமி உடலுக்கு இபிஎஸ் நேரில் அஞ்சலி
Advertisement

கோவை அன்னூரை சேர்ந்த அமுல் கந்தசாமி (வயது.60) வால்பாறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இவர் உடலநலக்குறைவு காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்து வந்தது. இந்த சூழலில் அமுல் கந்தசாமி இன்று (ஜூன் 21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.க. அமுல்கந்தசாமி உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

கட்சியின் மீதும், கட்சித் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அமுல்கந்தசாமி மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கட்சிப் பணிகளை ஆற்றியவர். அதே போல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.

அமுல்கந்தசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். அமுல் கந்தசாமியின் உடல் அவரது வீடு அமைந்துள்ள கோவை அன்னூர் ஒட்டர்பாளையம் ஊராட்சி ஜீவா நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உடல்நல குறைவால் உயிரிழந்த வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் உடலுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், "வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பிரச்னைக்காக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சட்டமன்றத்தில் பேசியவர் அமுல் கந்தசாமி. அவரது கல்லூரி காலம் முதலே அதிமுகவில் இணைந்து திறமையான முறையில் பணியாற்றியவர். அவரது இழப்பு தொகுதி மக்களுக்கும் கட்சிக்கும் பேரிழப்பு" என்றார்.

Tags :
Advertisement