”ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்” - புத்தக வெளியீட்டு விழாவில் அமித் ஷா பேச்சு!
டெல்லியில் இன்று(ஜூன்.19) முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய ‘மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “நம் நாடு இருள் சூழ்ந்த காலத்தில் கூட, இலக்கியம் மதம், சுதந்திரம் நம் கலாச்சாரத்தின் விளக்குகளை ஏற்றி வைத்தது. அரசாங்கம் மாறியபோது, யாரும் அதை எதிர்க்கவில்லை. ஆனால், யாராவது நமது மதம், கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தைத் தொட முயன்ற போதெல்லாம், நமது சமூகம் அவர்களை எதிர்த்து நின்று தோற்கடித்தது. இலக்கியம் நமது சமூகத்தின் ஆன்மா.
இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அதுபோன்ற சமூகம் உருவாவது வெகு தொலைவில் இல்லை. நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்தின் ரத்தினங்கள் என்று நான் நம்புகிறேன். நமது மொழிகள் இல்லாமல், நாம் உண்மையிலேயே இந்தியராக இருப்பதையே நிறுத்திவிடுவோம்.
நமது நாடு, நமது கலாச்சாரம், நமது வரலாறு மற்றும் நமது மதத்தைப் புரிந்து கொள்ள, எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது. அரைகுறையான அந்நிய மொழிகள் மூலம் முழுமையான இந்தியா என்ற கருத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது. இத்தகைய போர் எவ்வளவு கடினமானது என்பதை நான் முழுமையாக அறிவேன். ஆனால், இந்திய சமூகம் இதில் வெற்றி பெறும் என்றும் நான் முழுமையாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை, சுயமரியாதையுடன், நம் நாட்டை நம் சொந்த மொழிகளில் நடத்துவோம், உலகையும் வழிநடத்துவோம்”
இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.