’அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை’- செல்வப்பெருந்தகை கண்டனம்!
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு மற்றும் சொந்தமான இடங்களில் அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்க துறையினர் சோதனை என கூறப்பட்டு வரும் நிலையில், சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைச்சர் ஐ.பெரியசாமி உறவினர்களுக்கு சொந்தமான வீடு, மில் உள்ளிட்ட
இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அமைச்சரின் உறவினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அமலாக்கத்துறையின் சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
”தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், தி.மு.கட்சியின் மூத்தத்தலைவருமான ஐ.பெரியசாமி அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பிளவுபடுத்தவும் பாஜக அரசு செய்யும் சூழ்ச்சிதான் அமலாக்கத்துறை சோதனை. இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பையும் சிதைக்கக் கூடியவை. அமலாக்கத்துறையினரின் இத்தகைய நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றேன்"
என்று தெரிவித்துள்ளார்.