For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அரசியல் லாபத்திற்காக வெற்று அறிக்கை, போராட்டங்களை #AIADMK அறிவிக்கிறது " - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!

01:27 PM Oct 01, 2024 IST | Web Editor
 அரசியல் லாபத்திற்காக வெற்று அறிக்கை  போராட்டங்களை  aiadmk அறிவிக்கிறது     அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Advertisement

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பு செய்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முல்லைப் பெரியாறு அணை மற்றும் பேபி அணையை பலப்படுத்திய பின் அணையின் நீர் மட்டத்தை 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் 27.02.2006 அன்று ஆணையிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், தமிழ்நாடு அரசு முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 17.06.2021- ல் பிரதமருக்கு அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் முல்லைப் பெரியாறு அணை பிரச்னை குறித்து கேரள அரசு ஒத்துழைக்க அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து நானும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து 06.07.2021 அன்று அளித்த கோரிக்கை மனுவில், அணையை பலப்படுத்த கேரள அரசிற்கு உத்தரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டதுடன், தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வளத் துறையும் சம்மந்தப்பட்ட கேரள அரசின் அதிகாரிகளுடன் தொடர்ந்து, இது குறித்து கடிதம் மற்றும் பல வழக்குகளின் மூலம் நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளனர்.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் (I.A. 28 of 2017) இது தொடர்பாக ஒரு கூடுதல் மனுவை தமிழ்நாடு அரசு 27.11.2021 அன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும், 14.11.2022 மற்றும் 07.08.2023 தேதிகளில் இடைக்கால மனுக்களையும் தாக்கல் செய்துள்ளது. 03.03.2022 அன்று நான் கேரள நீர்வளத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், பேபி அணை அருகே உள்ள மரங்களை அகற்ற விரைவில் அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

முல்லைப் பெரியாறு அறிவுரையின்படி அணையின் மேற்பார்வைக் 12.12.2022 மற்றும் 05.05.2023 ஆகிய குழுவின் தேதிகளில் நடைபெற்ற இரு மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டத்திலும் இந்த பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. 05.05.2023 அன்று நடந்த கூட்டத்தை தொடர்ந்து, கேரள அரசு வல்லக்கடவு முல்லைப் பெரியாறு அணை வனச்சாலையை சரிசெய்வதற்கு ரூபாய் 31.24 லட்சத்திற்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, 04.10.2023 அன்று தமிழ்நாடு அரசு கேரள அரசிற்கு இத்தொகையை செலுத்தியது.

தரைப்பாலம் சீரமைக்கும் பணி 09.02.2024 அன்று தொடங்கப்பட்டு 09.05.2024 அன்று முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு, கேரள அரசுக்கு கடிதங்களின் வாயிலாகவும், மேற்பார்வை குழு கூட்டங்களின் வாயிலாகவும், பேபி அணையின் எஞ்சிய பணிகளை முடிக்க தேவையான அனுமதி அளிக்க வலியுறுத்தி வருகிறது. மீதமுள்ள பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு, அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவதன் மூலம், தமிழ்நாட்டின் உரிமை மற்றும் முல்லைப் பெரியாறு அணை பாசன விவசாயிகளின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திமுக அரசு தமிழ் மொழி மற்றும் மாநில உரிமைகளுக்காக எப்போதும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துவந்துள்ளது. அண்டை மாநில நதி நீர் பிரச்னையில் அரசியல் லாபம் கருதி வெற்று அறிக்கைகளையும் போராட்டங்களையும் அறிவிக்கும் அதிமுக. மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”

இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement