மழையில் அடியோடு சாய்ந்த மின் கம்பங்கள் ... 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்பட்டது - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் புதிய ஜெயங்கொண்டம் கோட்ட அலுவலகத்தை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி, மாநில சட்டதிட்ட திருத்தகுழு இணை செயலாளர் சுபா சந்திரசேகர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், "தமிழ்நாடு முழுவதும் பொது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஏதுவாக, முதலமைச்சர் அறிவுரைப்படி ஆங்காங்கே இருக்கக்கூடிய மின் கோட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் இருந்த ஒரேயொரு மின்கோட்டத்தை தற்போது இரண்டாக பிரித்து, ஜெயங்கொண்டம் மின்கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் 30 கி.மீ வரை அலைந்து தங்கள் குறைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவை இருக்காது. ஜெயங்கொண்டம் மின் கோட்டத்தின் கீழ் 10 துணை மின் நிலையங்கள் இயங்கும். இந்த ஆண்டு எதிர்பாரா விதமாக காற்றுடன் பெய்த கோடை மழையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தது.
அதனை மின்துறை ஊழியர்கள் 24 மணி நேரத்திற்குள் சரி செய்து மின் விநியோகத்தை சீர்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர் கீதா, மேற்பார்வை பொறியாளர் மேகலா, செயற்பொறியாளர் அய்யனார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.