சிறு வயதில் டூத் பிரஷை முழுங்கிய முதியவர் - 52 ஆண்டு ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவர்களால் அகற்றம்!
கிழக்கு சீனா பகுதியைச் சேர்ந்த யாங் என்ற குடும்ப பெயரை கொண்ட 64 வயது முதியவர், தனது 12 வயதில் பல் துலக்கும்போது டூத் பிரஷை முழுங்கியுள்ளார். இது குறித்து பெற்றோருக்கு தெரிந்தால் திட்டுவார்கள் என்ற பயத்தில் அதை சொல்லால் மறைத்துள்ளார். மேலும் அது கரைந்துவிடும் அல்லது இயற்கையாக வெளியேறிவிடும் என்று நினைத்து தன்னைதானே ஆறுதல் படுத்திக்கொண்டு இருந்துள்ளார்.
பல ஆண்டுகளாக வயிற்றில் எந்தவித அசெளகரியத்தையும் உணராத அவர், தற்போது வயிற்றில் ஏற்பட்ட அசெளகரியத்தை உணர்ந்து அங்குள்ள மருத்துமனையை அணுகியுள்ளார். இதையடுத்து அவரின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அவரது சிறுகுடலில் 17 செண்டி மீட்டர் நீளம் கொண்ட டூத் பிரஷ் இருப்பதை அடையாளம் கண்டனர்.
இதையடுத்து மருத்துவர்கள், எண்டோஸ்கோபிக் சிகிச்சையை முறையை செய்து 52 ஆண்டுகளாக அவரின் வயிற்றில் சிக்கியிருந்த டூத் பிரஷை 80 நிமிட ஆபரேஷன் மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இது குறித்து சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர் ஜூ, “டூத் பிரஷ் அவரது குடலில் அழுத்தி, துளையை ஏற்படுத்தியிருக்க கூடும். இதனால் இரத்த கசிவு ஏற்பட்டு மரணம் நேரிட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்”. இருப்பினும் பாதிப்பில்லாமல் அந்த முதியவரின் வயிற்றில் இருந்த டூத் பிரஷை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.