“சில விஷயங்களை கூறினால் எடப்பாடி பழனிச்சாமி திஹார் சிறைக்கு செல்வார்” - ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு!
நான் முதலமைச்சராக இருந்த போது சில தவறுகள் நடந்தன. சில விஷயங்களை நான் கூறினால் எடப்பாடி பழனிச்சாமி திஹார் சிறைக்கு சென்று விடுவார் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
கோவை சூலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக கூறப்பட்டது. சென்னையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் ஒபிஎஸ் கோவையில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒபிஎஸ் பேசியதாவது:
”ஈரோடு இடைதேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொன்னதால் தான் போட்டியிடாமல் வாபஸ் பெற்றோம். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ஆதரவு கொடுத்ததால் தான் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி காப்பாற்றப்பட்டது. தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை. எடப்பாடி பழனிச்சாமியிடமிருந்து கட்சியை காப்பாற்றுவதே என் எண்ணம்.
அதிகார போதை, பணத் திமிரால் இபிஎஸ் உள்ளிட்டோர் அதிக இடர்பாடுகளை எங்களுக்கு தந்தார்கள். எங்களிடம் உள்ளவர்கள் தான் தொண்டர்கள். தற்போது தேர்தலில் நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அமைப்புரீதியாக நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். கிளைக் கழகங்கள் அமைக்க வேண்டும். பேரூராட்சி கிளை நிர்வாகிகளை அமைக்க வேண்டும்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின், உள் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2 முறை பதவியை என்னிடம் கொடுத்தார்கள். அவரிடம் பதவியை திரும்ப கொடுத்தேன். 3-வது முறை சசிகலாவிடம் கொடுத்து விட்டேன். என்னை யாரும் துரோகி என கூற முடியாது. என் மேல் எந்த தவறும் கூற முடியாது.
நான் முதலமைச்சராக இருந்த போது சில தவறுகள் நடந்தன. சில விஷயங்களை நான் கூறினால் எடப்பாடி பழனிச்சாமி திஹார் சிறைக்கு சென்று விடுவார். அவை அரசாங்க ரகசியம் என்பதால் அமைதியாக விட்டு விட்டேன். ஜானகி நூற்றாண்டு விழா தொடர்பான தீர்மானத்தை வரவேற்கிறோம். ஜன.19-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. என்னை திமுகவின் மறைமுக ஆதரவாளர் என்பவர்கள் முட்டாள்கள்”
இவ்வாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.