போதை பொருட்கள் விற்பனை : நடவடிக்கை எடுப்பதை காவல்துறை பார்த்துக் கொள்ளும் - துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்!
சர்வதேச போதை பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு நேற்று பாரதி அறக்கட்டளை சார்பில் போதை பொருள் இல்லா புதுச்சேரி என்கிற நடைபயனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கம்பன் கலையரங்கத்தில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கையில் பதாகைகள் உடன் போதை பொருட்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி புதுச்சேரி முக்கிய வீதிகள் வழியாக கடற்கரை சாலை வந்தடைந்தனர்.
முன்னதாக விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மாணவர்களுடன் நடந்து சென்றார். பின்னர் கடற்கரை சாலையில் போதை பொருளுக்கு எதிராக உறுதி மொழி எடுத்து கொள்ளப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், "புதுச்சேரி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 23 சதவீத பேர் வாழ்க்கையில் ஒரு முறையாவது போதைப் பொருள் உட்கொண்டுள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது. இது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர், அனைவரும் போதை பொருட்கள் உட்கொள்கிறார்கள் என்று சொல்ல முடியாது 18 வயதிற்கு முன்பே மாணவர்கள் போதை பொருட்கள் எடுப்பது வருத்தம் அளிக்கக் கூடியது.
மாணவர்கள் போதை பொருட்கள் எடுப்பதை பெற்றோர்கள் வெளியே சொல்வதில் தயக்கம் காட்டுவார்கள் ஆனால் அதிலிருந்து அவர்களை வெளி கொண்டுவர அவர்கள் முயற்சி எடுக்க வேண்டும், போதை பொருட்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை காவல்துறை பார்த்துக் கொள்ளும் என தெரிவித்தார்.