”இந்துக்களை சீண்டி பார்க்காதீர்கள்” - எச்சரித்த பவன் கல்யாண்!
இந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு இன்று(ஜூன்.22) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மற்றும் அதிமுக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பவன் கல்யாண் பேசியதாவது, “மதுரையில் தந்தை சிவனும் தாய் பார்வதியும் மகன் முருகனும் உள்ளனர். மதுரை மண்ணில் வசிப்பதற்கு மக்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். தென் தமிழ்நாட்டில் மாபெரும் தலைவராக முத்துராமலிங்க தேவர் திகழ்ந்தார். இந்துக்களின் கலாச்சாரம் மிக ஆழமானது அதை யாராலும் அழிக்க முடியாது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அறம் நிறைந்துள்ளது.
உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகப்பெருமான் அநீதியை அழித்து, மக்களை சமமாக நடத்திய முருகன், புரட்சி தலைவராக திகழ்கிறார். இந்து மத நம்பிக்கையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது. அதை கேட்க நீங்கள் யார்? இந்து மதத்திற்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் அவமரியாதை செய்யாதீர்கள். இந்து மதங்களை கேள்வி கேள்வி கேட்பவர்கள் அரேபியாவில் இருந்து வந்த மதம் குறித்து கேள்வி கேட்க முடியுமா?
இந்துக்களை சீண்டி பார்க்காதீர்கள், சாது மிரண்டால் காடு கொள்ளாது, கடவுள்களின் நிறங்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். கருப்பு நிறத்தை வைத்து கடவுளை சீண்டும் கூட்டம் இங்குள்ளது. தமிழ்நாட்டில் முருகனை சீண்டி பார்க்கக்கூடிய கூட்டம் உள்ளது. கந்த சஷ்டி கவசத்தை கிண்டல் செய்கிறார்கள். இந்து கடவுளை, கலாச்சாரத்தை கேலி செய்வதற்கு ஜனநாயகத்தில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்து மதத்தை பற்றி பேசுபவர்கள் மற்ற மதத்தை பற்றி பேச முடியுமா? இந்துக்கள் கோழைகள் அல்ல, முருக பக்தர்கள் ஒரு பார்வை பார்த்தாலே போதும். முருகனை இழிவாக பேசினால் இந்துக்களின் இதயம் நொறுங்க வேண்டாமா? முருகன் எனது கடவுள். அவர் எனக்கு தொடர்ந்து தைரியங்களை வழங்கி வருகிறார். நம்முடைய எண்ணங்கள் நிறைவேற வேண்டுமென்றால் இந்துக்கள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் தமிழ்நாட்டில் தர்மத்தின் பாதையில் மாற்றம் ஏற்படும். முருகனை நம்பினால் வெற்றி, உயர்வு, எழுச்சி கிடைக்கும்” என்று கூறினார்.