“பழக்க தோஷத்துல ஜிகர்தண்டா, பருத்தி பால் கேட்ராதீங்க”... முதல்முறையாக மதுரையிலிருந்து அபுதாபிக்கு இயக்கப்பட்ட விமானத்தில் விமானி கலகல!
மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய் ஆகிய இரு வெளி நாடுகளுக்கு மட்டுமே பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மூன்றாவதாக மதுரையிலிருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமானம் தனது பயணிகள் விமான சேவையை நேற்று துவங்கியது.
முதல்முறையாக மதுரையில் இருந்து நேரடியாக அபுதாபிக்கு விமான சேவை தொடங்கப்பட்டது மதுரை மக்கள் மற்றும் தொழில்துறையினரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அகமதாபாத் விமான விபத்து காரணமாக நேற்று இந்த விமான சேவைக்கு கொண்டாட்டம், வரவேற்பு போன்றவை எதுவும் இல்லாமல் தொடங்கப்பட்டது.
நேற்று முதல்முறையாக மதுரையில் இருந்து அபுதாபிக்கு சென்ற விமானத்தை மதுரையை சேர்ந்த விமானிதான் இயக்கினார். விமானம் புறப்படுவதற்கு முன்பு பயணிகளிடம் பேசிய அவர்,
“இன்னும் 5 நிமிடத்தில் கதவை சாற்றிவிட்டு கிளம்பிவிடுவோம். சுமார் 3,000 கி.மீ தொலைவில் 4 மணி நேரம் பயணித்து அபுதாபியை அடைவோம். நல்லா என்ஜாய் பண்ணுங்க. நம்ம ஊர் விமானம் என்று ஜிகர்தண்டா, பருத்தி பால் எல்லாம் கேட்காதீர்கள். கிடைக்காது. நாம் புறப்படுவதற்கு தயாராகிவிட்டோம். எந்த உதவிகள் தேவைப்பட்டாலும் எங்களிடம் கேளுங்கள். உங்களுக்கு உதவி செய்வதற்காக நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
உங்கள் அனைவருக்கும் நன்றி வணக்கம் என்று தமிழில் கூறினார். விமானத்தில் இருந்த பயணிகளும், முதல் விமானத்தை மதுரையைச் சேர்ந்த நீங்கள் இயக்குவது எங்களுக்கு கௌரவமாகவும், பெருமையாகவும் உள்ளது.” என்று கூறினர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.