’நாய்க்கு கூட இருப்பிடச் சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்’..! - பீகாரில் சர்ச்சை!
பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டபேரவைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு பீகாரில் தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வருகிறது. இதனை கடுமையாக எதிர்த்த எதிர் கட்சிகள் 21ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பீகாரின் அரசு மிண்ணனு பொது சேவைகளை வழங்கும் ஆர்டிபிஎஸ் இணையதளத்தில், பாட்னா அருகே உள்ள மசௌரியில், ஒரு நாய்க்கு வழங்கப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் வைரலாகி வருகிறது.
அந்த சான்றிதழில், நாயின் பெயர் நாய் பாபு எனவும், தந்தை பெயர் குட்டா பாபு, தாய் குட்டியா தேவி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த சான்றிதழில் நாயின் புகைப்படமும் வீட்டு முகவரியும் இடம்பெற்றுள்ளது.மேலும் வருவாய்த் துறை அதிகாரியின் டிஜிட்டல் கையெழுத்தும் அந்த சான்றிதழில் உள்ளது. இந்த இருப்பிடச் சான்றிதழ் உண்மையானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆதார் அட்டையும் குடும்ப அட்டையும் வாக்காளர் திருத்தத்திற்கு ஏன் தகுதிச் சான்றிதழ்களாக ஏற்கப்படவிலை என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் ஒரு நாய் இருப்பிடச் சான்றிதழ் பெற்று இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விவகாரம்வெளிச்சத்துக்கு வந்த சற்று நேரத்தில், அந்த சான்றிதழை ரத்து செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து ”விண்ணப்பதாரருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு தொடர்புள்ள கணினி இயக்குநர், சான்றிதழ் வழங்கியவர்கள் ஆகியோர்க்கு எதிராக விசாரணை நடத்தப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திருணாமுல் காங்கிரஸ்
ஏழைக் குடிமக்களின் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் போலியானவை என்று முத்திரை குத்தப்படும் அதே வேளையில், சிறப்பு வாக்காளர் திருத்தத்துக்கு இப்போது ஏற்றுக்கொள்ளப்படும் சான்றிதழ் இதுதான். உண்மையான மனிதர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார்கள். "நாய் பாபு" இப்போது வாக்களிக்க தகுதியுடையவரா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.