ஆட்சியா? எதிர்க்கட்சியா? நாளை முடிவு செய்யப்படும் - ராகுல் காந்தி பேட்டி!
“ஆட்சி அமைக்க உரிமை கோருவதா? எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போகிறோமா? என்பதை நாளைய எதிர்க்கட்சி கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளோம்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 294 தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளது. இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து காங்கிரஸ் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி,
“மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு மக்களவைத் தேர்தல் ஒரு அரசியல் ரீதியிலான தேர்தல் கிடையாது. பாஜக மட்டுமின்றி சிபிஐ, அமலாக்க துறையை எதிர்த்து நின்று வென்றுள்ளோம். இந்தியா கூட்டணி கட்சியினர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்காக தேர்தலை சந்தித்தோம். ஏழைகளுக்கான தொலைநோக்குத் திட்டம், தேசத்திற்கான தொலைநோக்கு திட்டத்துடன் மக்களை அணுகினோம். ஏழைகளிடமிருந்து எடுக்கப்பட்ட பணம் அதானிடம் சென்றதற்கு வேறு சான்று தேவையில்லை. மோடி தோற்கிறார், அதே சமயத்தில் அதானியின் பங்கு வீழ்கிறது.
ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் நலனுக்காக எழுதப்பட்டது தான் அரசியலமைப்புச் சட்டம். ஆட்சி அமைக்க உரிமை கோருவதா? எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போகிறோமா? என்பதை நாளைய எதிர்க்கட்சி கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளோம். எங்கள் யுக்தி என்ன என்பதை இப்போதே சொன்னால் மோடி உஷாராகி விடுவார். ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதி மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
எந்த தொகுதியில் ராஜினாமா செய்வது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். எந்தத் தொகுதியில் ராஜினாமா செய்வது என்பது பற்றி தற்போது முடிவெடுக்கவில்லை. உத்தரப்பிரதேச மக்கள் அரசியல் அறிவை கண்டு பிரம்மிக்கிறேன். இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. உத்தரப்பிரதேச மக்களுக்கு சிறப்பு நன்றி. அரசியலமைப்புச் சட்டத்தை காத்ததில் உத்தரப்பிரதேச மக்களின் பங்கு அதிகம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிரியங்கா காந்தி காரணம்” என தெரிவித்துள்ளார்.