"2026ல் திமுக ஆட்சிக்கு வராது" - நயினார் நாகேந்திரன் பேட்டி!
விருதுநகர் நந்திமரத் தெருவில் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இதுவரை முடிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து பூத்களிலும் வலிமையாக்குவதற்கு அடுத்த மாவட்டத்திலிருந்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். 2026 தேர்தலில் தங்களது கூட்டணி ஆட்சி அமைவதற்கு ஏதுவாக திமுகவினர் மக்கள் வெறுக்கும் அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்காக நாங்கள் இந்த பயணத்தைத் தொடங்கியுள்ளோம்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டம் நடத்தலாம். சிவகங்கை காவல் நிலைய மரணம் நடந்துள்ளது மட்டுமின்றி இதுவரை நடந்த அத்தனை காவல்நிலைய மரணங்களுக்கும் சிபிஐ விசாரணை வேண்டும். முதல்வர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் முதலில் கூறியது நான்தான். விடுதலை சிறுத்தைகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பீர்களா, கூட்டணி ஆட்சியா, தனித்த ஆட்சியா என முதல்வர் ஸ்டாலினிடம் கேளுங்கள்.
முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த அ.ராசா பெண்களை கேவமாக பேசுகிறார். அமைச்சரவையில் உள்ள ஒருவர் பெண்களை கேவலமாக பேசுகிறார். இதுகுறித்து முதல்வரிடம் கேளுங்கள். பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. ப வடிவில் இருக்க வேண்டும் என்பது என்ன அடிப்படையில் என்பது தெரியவில்லை. படிக்கும் மாணவர்களுக்கு எந்த வகையில் அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பதுதான் முக்கியம். முதல் பெஞ்சில் இருப்பவர் நன்றாக படிப்பார், கடைசி பெஞ்சில் இருப்பவர் நன்றாக படிக்கமாட்டார் என்பது இல்லை. 2026ல் திமுக ஆட்சிக்கு வராது என்று தெரிவித்துள்ளார்.