“நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை இனியாவது திமுக நிறுத்த வேண்டும்” - அண்ணாமலை!
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 4ம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை இனியாவது திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;
“நீட் தேர்வில், தமிழ்நாட்டில் தேர்வெழுதிய மாணவர்களில், 76,181 மாணவர்கள், தகுதி மதிப்பெண்கள் பெற்றுள்ளதும், முதல் 100 இடங்களில் 6 இடங்களை, தமிழ்நாடு மாணவர்கள் பிடித்துள்ளதும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வரும் நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை உடைத்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மாணவர்கள் நீட் தேர்வில் சாதித்துக் கொண்டிருப்பது பெருமைக்குரியது. திமுக அரசு, இனியாவது தனது பொய் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு, அரசு மருத்துவக் கல்லூரிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.