"இந்தியாவின் ஒரு பகுதி மக்களை திமுக இழிவுபடுத்துவதை நிறுத்த வேண்டும்" - வானதி சீனிவாசன்!
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அரைக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "பீகார் உள்ளிட்ட வட மாநில மக்களுக்கு எதிரான திமுகவின் வெறுப்பு சித்தாந்தத்தை தான் பிரதமர் நரேந்திர மோடி அம்பலப்படுத்தியுள்ளார். இந்தியாவின் ஒரு பகுதி மக்களை இழிவு செய்வதை திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
திமுக எப்போதுமே, 'வடக்கு - தெற்கு’, 'ஆரியம் - திராவிடம்' என பிரிவினைவாதம் பேசி அரசியல் செய்யும் கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் பீஹார், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை இங்கு வரவழைக்கிறார்கள்.
திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் எம்.பி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வட மாநிலத் தொழிலாளர்களை குறிப்பாக பீகார் மாநிலத்திலிருந்து வந்தவர்களை, "பானி பூரி விற்க வந்தவர்கள், கழிப்பறை சுத்தம் செய்ய வந்தவர்கள்" என இழிவு செய்ததை யாரும் மறந்து விட முடியாது.
வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக திமுக வெறுப்பை விதைத்ததால் சில இடங்களில் அவர்கள் தாக்கப்படும் சம்பவமும் நடந்தது. இது கடந்த 2023ல் பீகாரிலும் பெரும் பிரச்னையாக வெடித்தது. தருமபுரி தொகுதி திமுக எம்.பியாக இருந்த செந்தில்குமார், நாடாளுமன்றத்திலேயே பீகார் உள்ளிட்ட ஹிந்தி பேசும் மாநிலங்களை இழிவுபடுத்தினார்.
இந்த உண்மைகளைத்தான், பீகார் தொழிலாளர்களுக்கு எதிரான திமுகவின் வெறுப்பு சித்தாந்தத்தை தான் பிரதமர் நரேந்திர மோடி அம்பலப்படுத்தியுள்ளார். "தமிழ்நாட்டில் உழைக்கும் பீகார் தொழிலாளர்களை திமுக துன்புறுத்துகிறது. பீகார் மக்களை அவமதித்தவர்களை, பீகாரிலேயே பிரசாரம் செய்ய காங்கிரஸ் அழைத்துள்ளது" என்ற உண்மையை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர்களுக்கும், பீகார் மக்களுக்கும் பகையை உண்டாக்குவதாக குற்றம்சாட்டியிருக்கிறார். தமிழர்களுக்கும், பீஹார் மக்களுக்கும் இடையை மட்டுமல்ல, தமிழர்களுக்கும், வட மாநில மக்களுக்கும் இடையை கட்சி தொடங்கிய காலம் முதல் பகையை வளர்த்து வருவது திமுகதான். வடக்கு - தெற்கு பிரிவினைதான் திமுகவின் அடிப்படை சித்தாந்தம்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களை குறை சொல்லவில்லை. பீகார் மக்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்கும் திமுகவினரைதான் மக்களுக்கு அடையாளம் காட்டியுள்ளார். சிறுபான்மை வாக்குகளை மொத்த அறுவடை செய்வதற்காக ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தையும் இழிவு செய்யும் திமுக, அதற்கு இணையாக வட மாநில மக்களையும் இழிவு செய்து வருகிறது. இப்படி இந்தியாவின் ஒரு பகுதி மக்களை இழிவு செய்வதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், திமுகவினரும் நிறுத்திக் கொள்ள வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
            