“ரூ.500 கோடி கொடுத்து விஜய்யை திமுக கூட்டணிக்கு அழைக்கிறது” - எம்எல்ஏ கருப்பண்ணன் பேச்சு!
திருப்பூர் அருகே செங்கப்பள்ளியில், ஊத்துக்குளி அதிமுக ஒன்றிய பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்களிடையே பேசிய பவானி அதிமுக எம்எல்ஏ கருப்பண்ணன்,
“எடப்பாடி பழனிசாமி தலைமையில் அருமையான கூட்டணி அமைந்துள்ளது. எனவே நாம்தான் 200 தொகுதிகளில் ஜெயிக்க போகிறோம். கடந்த தேர்தலில் இரு கட்சியும் தனித்தனியே பிரிந்து நின்றால்தான் வெற்றி வாய்ப்பை இழந்தது. கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வரவுள்ளன. இப்போது கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு ரூ. 500 கோடி கொடுத்து திமுக கூட்டணிக்கு அழைக்கின்றனர். ஆனால் அவர் வாங்கமாட்டார். அப்படி வாங்கினால் அவர் அரசியல் அத்துடன் முடிந்துவிடும்.
விலைவாசி ஏறியுள்ளது. இளைஞர்கள் விரைவாக தேர்தல் பணிக்கு வருவர். கட்சியில் இப்போதுள்ள கட்சி நிர்வாகிகளுக்கு வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்த தெரியாது. எனவே இளைஞர்களை அதிகளவில் அழைத்து வர வேண்டும். அவர்களுக்கும் கட்சியில் எந்தவிதமான பதவிகளும் கிடைக்கலாம். ஏழை, எளியவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமென நினைப்பவர்களே அரசியலுக்கு வர வேண்டும்.” என்றார்.
இந்நிகழ்வில் பெருந்துறை அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.