"திமுக தோல்வி பயத்தை ஒத்துகொண்டுவிட்டது"- வழக்குப்பதிவு குறித்து அண்ணாமலை விளக்கம்!
திமுக தோல்வி பயத்தை ஒப்புக் கொண்டதாக கோவை தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆவாரம்பாளையம் பகுதிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்றிரவு 10.30 மணிக்கு பின்னர் வந்துள்ளார். இரவு 10 மணிக்கு மேலாக வாக்கு சேகரிக்க அனுமதி இல்லாத நிலையில், 10.30க்கு பின்னரும் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதை அடுத்து அப்பகுதியில் இருந்த திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
’’தேர்தல் விதிமுறைகளை மீறியதாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறையின்படி இரவு 10 மணிக்கு மேல் வேட்பாளர் மக்களை சந்திக்கக் கூடாது என்கிற எந்த விதியும் கிடையாது. இரவு பத்து மணிக்கு மேல் நேரம் ஆகிறது என்றால் மைக்கை ஆஃப் செய்து விட்டு மக்களிடம் பேசி விட்டு வரலாம். காவல்துறை அனுமதி கொடுத்த இடங்களுக்குதான் நேற்று போயிருக்கிறேன்
ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள மக்களைக் கேட்டால் நான்கு மணி நேரம் காத்திருந்ததாக மக்களே சொல்வார்கள். 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை. பிரதமர் மோடியே 10 மணிக்கு மேல் போய் பொதுமக்கள் முன்னிலையில் மேடையில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்ட வரலாறையும் இந்த நாடு பார்த்து இருக்கிறது
மக்களின் அன்பினால் நேரம் கூடுதலாக பிரச்சாரத்தில் செலவாகிறது. பிரச்சாரத்தின் போது காவல்துறை இருந்தார்கள், தேர்தல் ஆணையத்தின் வீடியோகிராபர்கள் இருந்தார்கள். 10 மணிக்கு மேல் நான் மைக்கை எடுத்து பேசிய வீடியோக்களை வெளியிட வேண்டும்.
இதன்மூலம் திமுக எந்த அளவுக்கு பயப்படுகிறது என்பது புரிகிறது. திமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள். திமுகவின் கோட்டை இங்கு பாஜகவிற்கு மக்களே வரமாட்டார்கள் என்ற கூற்று எல்லாவற்றையும் உடைத்து மக்கள் சாலையில் வந்து நிற்கிறார்கள். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் நான்கு மணி நேரமாக நிற்கிறார்கள். தன்னிச்சையாக மக்கள் வந்து நிற்கிறார்கள்’’ என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.