தமிழ்நாட்டில் 40-க்கு 40 தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி கட்சிகள்!
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று அசத்தியுள்ளன.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. அதே நேரம் அதன் கூட்டணி கட்சியான பாமக தருமபுரி தொகுதியில் முன்னிலையில் இருந்தது. ஆனால் இறுதியில் அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் மணி 21300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.