தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் - அமைச்சர் உதயநிதி பேச்சு!
தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றிபெறுவதாகவும், இந்து இஸ்லாமிய கிறிஸ்தவர்கள் உறவினர்களாக இருப்பதாகவும், பாசிச பிரச்சாரம் ஒருபோதும் எடுபடாது எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றுவருகிறது. ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டங்களில் பொறுப்பு அமைச்சர்களுடன், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், இன்று (பிப். 17) ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
“மதத்தை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் நடத்த நினைக்கும் பாஜகவின் கனவு பலிக்காது. புதிய கல்வி கொள்கை மூலம் 5, 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வை கொண்டு வந்து நமது மாணவர்களை படிக்கவிடாமல் பாஜக செய்கிறது. எங்களுக்கு தேசிய கீதமும் முக்கியம். ஆனால், அதைவிட தமிழ்த்தாய் வாழ்த்தும் முக்கியம். இனிமேல், அனைத்து கழக நிகழ்ச்சிகளும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் இந்து இஸ்லாமிய கிறிஸ்தவர்கள் அண்ணன், தம்பி, மாமன், மச்சான்களாக உறவாடி வருகிறோம். எங்களிடத்தில் பாசிச பிரச்சாரம் ஒருபோதும் எடுபடாது.
2014-ம் ஆண்டு தேர்தலின் போது பிரதமர் மோடி பல வாக்குறுதிகளை அளித்தார். கடலில் மீன்கள் எங்கு உள்ளது என்று செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், மீனவர்கள் கடலில் எங்கு உள்ளனர் என இலங்கை தெரிந்துகொள்ளும் வகையில் மத்திய அரசு செய்துவிட்டது. பாஜக ஆட்சியில் தான், வட மாநிலத்தில் ஒரு கி.மீ தூர சாலைக்கு ரூ.125 கோடி செலவிட்டார்கள். அதிமுகவை விரட்டியது போல் அவர்களின் எஜமானர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. மதுரை எய்ம்ஸுக்கு வந்தது ஒரு செங்கல் மட்டும் தான். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை.
தமிழ்நாட்டுக்கான நிதிப் பகிர்வில் மத்திய பாஜக அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது. வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. வெள்ள பாதிப்புக்கு கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு தரவில்லை. நாம் செலுத்திய வரிப் பணத்தைதான் கேட்கிறோம். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி விரைவில் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.