#Maharashtra முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு!
மகாராஷ்டிராவின் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று மாலை பதவியேற்க உள்ளார்.
மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில் நவம்பர் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக, ஏக்நாத் சிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும் முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. காரணம் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றியது.
பாஜக 132 தொகுதிகளில் அமோக வெற்றிப் பெற்ற நிலையில், முதலமைச்சர் பதவி தேவேந்திர பட்னாவிஸ்க்குதான் என உறுதியாக இருந்தது. ஆனால் பீகாரில் குறைந்த இடத்தை கைப்பற்றிய நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது போல ஏக்நாத் ஷிண்டேக்கு வழங்கப்பட வேண்டும் என சிவசேனா தரப்பு கூறி வந்தது.

இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக, நேற்று (டிச.4) காலை பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மேலிடப் பார்வையாளராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், மகாராஷ்டிர முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து, தேவேந்திர பட்னாவிஸ், கூட்டணித் தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார் ஆகியோருடன் நேற்று மாலை அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனால் கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜீத் பவார் ஆகியோருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (டிச.5) மாலை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக அவர் பதவியேற்க உள்ளார்.