டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - தலைவர்கள் இரங்கல்!
டெல்லி செங்கோட்டை அருகே மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. திடீரென அந்த கார் வெடித்து சிதறியது. கார் வெடித்ததும் அந்த பகுதியில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி கார் வெடிப்பு சம்பவத்திற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"டெல்லி செங்கோட்டை அருகே காா் வெடிப்புச் சம்பவத்தில் அப்பாவி உயிா்கள் பல பலியாகியுள்ளது அதிா்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. சம்பவ இடத்தில் இருந்து வரும் காட்சிகளைக் கண்டு மனமுடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோா் மனவுறுதியோடு விரைந்து நலம் பெற விழைகிறேன்"
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
"டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். அதே நேரத்தில், நமது பாதுகாப்புப் படையினரின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். கிட்டத்தட்ட 300 கிலோ வெடிபொருட்கள் மற்றும் பல AK-47 துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருப்பது, நமது நாடு தொடர்ந்து எதிர்கொள்ளும் கடுமையான அச்சுறுத்தல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசும் காவல்துறையும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நான் கேட்டுக்கொள்கிறேன். அதிக கண்காணிப்பு தேவைப்படும் கடலோரப் பகுதிகளிலும் சிறப்பு கவனம் மற்றும் அதிகரித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்"
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
"டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவத்தால் நான் மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். அப்பாவி பொதுமக்களை, அதுவும் அத்தகைய வரலாற்று நினைவுச்சின்னத்திற்கு அருகில், குறிவைத்து நடத்தப்பட்ட இந்த வன்முறைச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலைச் செய்தவர்கள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று நம்புகிறேன்"
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை
"டெல்லி கார் வெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். டெல்லி கார்வெடிப்பை விசாரித்து வரும் நமது அதிகாரிகளுடன் ஒற்றுமையாக நின்று முழுமையாக ஆதரிப்போம். அனைவருக்கும் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான நமது உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவோம்"
தவெக தலைவர் விஜய்
“டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே கார் வெடிப்புச் செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அந்த விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகின. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்”