முதியோர் இல்லத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு... தென்காசியில் சோகம்!
தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் அன்னை
முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் 60க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியுள்ளனர். இந்த முதியோர் இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு உணவருந்திய சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதற்கட்டமாக 11 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சூழலில், நேற்று 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
செங்கோட்டை பகுதியை சேர்ந்த சங்கர் கணேஷ் (வயது 48), முருகம்மாள் (வயது 45), சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த அம்பிகா (வயது 40) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர் என்பது தெரியவந்தது. மற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ் மற்றும் மருத்துவர்கள் முதியோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து முதியோர் காப்பகத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகள், பார்வை திறன் குறைவுடையோர் உட்பட 14 ஆண்கள், 24 பெண்கள் உள்பட 42 பேர், 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சுந்தரபாண்டியபுரத்தில் இந்த முதியோர் இல்லம் கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், பாட்டா குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இந்த முதியோர் இல்லத்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமி (70) என்பவர் இன்று (ஜுன் 13) காலை உயிரிழந்தார். இதன்மூலம், உயிரிழந்ததோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 55 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்த காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.