டெல்லி முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் - இளைஞர் கைது!
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன் தினம் (ஜுன் 5) இரவு 11மணியளவில் மர்ம நபரிடம் இருந்து போன் வந்தது. அந்த நபர் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த காசியாபாத் போலீசார் இச்சம்பவம் குறித்து உடனடியாக டெல்லி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையும் படியுங்கள் : அதிகரிக்கும் கொரோனா தொற்று… ஒரே நாளில் இத்தனை இறப்புகளா?
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அவரை கண்டுப்பிடிப்பது சவாலாக இருந்தது. இதனால், போலீசார் தொலைதொடர்பு நிறுவனத்தின் உதவியை நாடினர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்தது டெல்லியின் பஞ்ச்வாலி பகுதியை சேர்ந்த ஸ்லோக் திரிபாதி (வயது 25) என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. இந்த நிலையில், காஜியாபாத்தில் உள்ள தௌலத்பூர் காலனியில் வைத்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் ஸ்லோக் திரிபாதியை டெல்லி போலீசார் இன்று (ஜுன் 7) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட திரிபாதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இளைஞர் சட்டக்கல்லூரியில் படித்து வருவதாக கூறப்படுகிறது.