இந்தியாவில் கொரோனா பாதிப்பு - 3 மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழப்பு!
2019ம் ஆண்டு முதன்முறையாக பரவிய கொரோனா தொற்று காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட மக்கள், இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தொடக்கத்தில் ஒன்று, இரண்டு என எண்ணிக்கை தொடங்கிய தொற்று, தற்போது 4 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இதனிடையே நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்றினால் நாட்டில் 3 ஆயிரத்து 961 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனால், அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரளாவில் அதிகபட்சமாக 1,435 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. மேலும் மருத்துவமனைகள் உள்பட பொது இடங்களில் கூடும் மக்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து மராட்டிய மாநிலத்தில் 506 பேரும், கர்நாடகத்தில் 253 பேரும், தமிழ்நாட்டில் 189 பேரும் சிகிச்சையில் உள்ளனர். இதேபோல், உத்தரபிரதேச மாநிலத்தில் 157 பேரும், புதுச்சேரியில் 7 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்து உள்ளது.