டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி! தேர்தல் அறிக்கை குறித்து முக்கிய ஆலோசனை!
டெல்லியில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. நாளை (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.
இதனிடையே காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
அதே போல் அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திரா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான தேர்தல் அறிக்கைகள் குறித்தும் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.