“காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக்கின் சிந்தனை பிரதிபலிக்கிறது!” - பிரதமர் மோடி
சுதந்திரப் போராட்டத்தின் போது முஸ்லிம் லீக்கில் இருந்த அதே சிந்தனை காங்கிரஸ் கட்சியில் தேர்தல் அறிக்கையிலும் பிரதிபலிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் நேற்று (06.04.2024) வெளியிட்டது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவருமான ப.சிதம்பரம் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
இந்த தேர்தல் அறிக்கையில், விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான முக்கிய வாக்குறுதிகள் மற்றும் இலவச திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, விவசாயிகளுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்தார்.
சஹாரன்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பேசியதாவது:
பாஜக அரசு எந்தவித பாகுபாடும் இல்லாமல் செயல்படுகிறது. அரசின் திட்டங்கள் ஒவ்வொரு பிரிவினரையும், ஒவ்வொரு சாதியையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.
ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கு என்ன தேவையோ அதற்கு நேர் எதிர் திசையில் செல்லும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் போது முஸ்லிம் லீக்கில் இருந்த அதே சிந்தனை காங்கிரஸ் கட்சியில் தேர்தல் அறிக்கையிலும் பிரதிபலிக்கிறது. அதோடு அக்கட்சியின் தேர்தல் அறிக்கையின் மற்றொரு பகுதி இடதுசாரி கொள்கைகளுடன் உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.