முதலமைச்சரின் கிராமச் சாலைகள் திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு!
முதலமைச்சரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ரூ.1000 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
- தமிழ்நாட்டில் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் கிராமப்பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
- கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வரும் 6 ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
- 2024-25ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் கிராமப்பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் தலா ரூ.3.5 லட்சம் செலவில் கட்டப்படும்.
- கலைஞர் கனவு இல்லம் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் குடிசையில்லா தமிழ்நாடு அமைக்கப்படும்.
- முதலமைச்சரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ரூ.1000 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும்.
- 5000 நீர்நிலைகளை புனரமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது, ரூ.500 கோடியில் 5000 ஏரிகள், குளங்கள் புனரமைக்கப்படும்.