திருச்சி, மதுரை டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்!
கடந்த 2022 செப்டம்பர் 16 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள் அமைக்க சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
திருச்சி பஞ்சப்பூரில் 5.58 லட்சம் சதுர அடியில் ரூ.403 கோடியில் டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் 5.34 லட்சம் சதுர அடியில் ரூ.314 கோடியில் டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது. மதுரையில் 13 தளங்களுடன் அமையும் டைடல் பூங்காவினால் 5,500 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. 2026 ஜூன் மாதம் இந்த டைடல் பூங்கா கட்டி முடிக்கப்படும்.
மேலும் இன்று தமிழ்நாட்டில் சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். 65 வயதுக்கு மேற்பட்ட 9 கைவினைஞர்களுக்கு ‘வாழும் கைவினை பொக்கிஷம்’ விருதுகள் வழங்கப்பட்டன. கைத்தறி தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி, படைப்புகளில் சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு விருது.
டெல்லி தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்க புத்தாக்க பணிக்காக ரூ.50 லட்சம் காசோலையை தமிழ்ச் சங்க தலைவர் உள்ளிட்டோரிடம் முதலமைச்சர் வழங்கினார். சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டட விரிவாக்கப் பணிக்காக ரூ.50 லட்சத்தை முதல்வர் வழங்கினார்.