இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்காலிகமாக அஜித்குமார் (29) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த நகை மாயமான சம்பவம் தொடர்பாக அஜித்குமார் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர் விசாரணையின் போது அவர் காவல்நிலையத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். காவல்துறையினர் அஜித்குமாரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்தாகவும், அவரின் கண், வாய் உள்ளிட்ட இடங்களில் மிளகாய்ப்பொடி தூவி துன்புறுத்தப்பட்டதாகவும் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அஜித்குமார் மிருக்கத்தனமாக தாக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாகவும், கொலை செய்பவர் கூட இதுபோல தாக்கமாட்டார் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். நிரந்தர வேலை வேண்டும் என அஜித்குமாரின் சகோதரர் கேட்டுக்கொண்ட நிலையில், நிச்சயம் அதற்கு ஏற்பாடு செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்தாக தெரிகிறது.