“சென்னை நகரம் பாதுகாப்பாக உள்ளது! ரோந்து செல்லும் பெண் போலீசாருக்கு துப்பாக்கி தேவையில்லை!” - காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்
பாதுகாப்பான சென்னையில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள பெண் காவலர்களுக்கு துப்பாக்கி தேவையில்லை என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
சென்னை பூக்கடை வால்டாக்ஸ் சாலை ஐசக் தெருவில் பெண் போலீசாருக்கான தங்கும்
விடுதி புனரமைக்கப்பட்டது. அதனை, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்
இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், வடக்கு மண்டல இணை ஆணையர் அபிஷேக் தீக்சித், பூக்கடை காவல் துணை ஆணையர் ஸ்ரேயா குப்தா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையடுத்து, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களிடம்
கூறுகையில், "57 மகளிர் காவலர்கள் தங்கும் வகையில் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சமைத்து சாப்பிடும் வகையில் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்க ஒரு நாளைக்கு 50 ரூபாய் என்ற கட்டணத்தில் பெண் காவலர்களுக்கு இந்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பக தகவல் படி, சென்னை பெருநகர பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிலும் அதேபோல் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் இரவில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது பல்வேறு கண்காணிப்பு வழிமுறைகள் உள்ளது. காவல் நிலையத்தில் இருந்து செல்லும்போதும், ரோந்து பணிக்கு செல்லும் இடங்களில் கையெழுத்திடுவது போன்ற நடவடிக்கைகள் மூலமாக காவலர்கள் எங்கெங்கு செல்கிறார்கள் என கண்காணிக்கப் படுகிறார்கள்.
மேலும், துணை ஆணையர்கள் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது மேலும் கூடுதல் புதிய நடைமுறையாக இணை ஆணையர் மற்றும் கூடுதல்
ஆணையர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள்
துப்பாக்கி எடுத்துச் செல்லும் வகையில் சென்னை மாநகரம் இதுவரை இல்லை. காணும் பொங்கலை முன்னிட்டு, தெற்கு கூடுதல் ஆணையர் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பாக கொண்டாடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கான திட்டம் தயாராக இருக்கிறது" என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.