பக்ரீத் பண்டிகை | கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும்
கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம்.
இஸ்லாமிய இறைதூதர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படும் இப்ராஹிம், இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக இந்த பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது. பிறை தெரிவதன் அடிப்படையிலேயே பக்ரீத் பண்டிகையும் நிச்சயிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வானில் கடந்த 28ம் தேதி பிறை தென்பட்டது.
இதனால், 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை ஜூன் 7 (நாளை மறுநாள்) ஆம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்தார். இதேபோல், கேரளாவிலும் நாளை (ஜூன் 6) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையை ஒட்டி நாளை கேரளாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார்.