சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு : தமிழுக்கு ஒரே ஒரு நாளா? - அன்புமணி ஆவேசம்..!
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 10&ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான இறுதி செய்யப்பட்ட கால அட்டவணை கடந்த அக்டோபர் 30&ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 17&ஆம் தேதி தொடங்கும் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் தேர்வாக பிப்ரவரி 17&ஆம் தேதி கணிதப் பாடத் தேர்வு நடைபெறவுள்ளது. பிப்ரவரி 21&ஆம் தேதி ஆங்கிலம், 23&ஆம் தேதி தமிழ் மற்றும் மாநில மொழிகள், 25&ஆம் தேதி அறிவியல், 27&ஆம் தேதி கணினி அறிவியல் சார்ந்த பாடங்கள், மார்ச் 2&ஆம் தேதி இந்தி, மார்ச் 7&ஆம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ அறிவித்திருக்கிறது. இந்த அட்டவணை தமிழ் பயிலும் மாணவர்களுக்கு எதிராக அமைந்திருக்கிறது.
பிப்ரவரி 21&ஆம் நாள் ஆங்கிலப் பாடத் தேர்வை எழுதும் மாணவர்கள், அடுத்த ஒரு நாள் இடைவெளியில் 23&ஆம் நாள் தமிழ்ப் பாடத் தேர்வை எழுத வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, அடுத்த ஒரு நாள் இடைவெளியில் அறிவியல் பாடத் தேர்வை எழுத வேண்டியிருக்கும். இதனால் தமிழ்ப் பாடத்தை படிப்பதற்கும், அறிவியல் பாடத்தை படிப்பதற்கு போதிய கால இடைவெளி கிடைக்காது. இதனால் அந்த இரு பாடங்களிலும் அவர்களின் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்புள்ளது. தமிழ்ப் பாடத் தேர்வு மட்டுமின்றி, உருது, பஞ்சாபி, வங்காளம், மராத்தி, குஜராத்தி, மணிப்பூரி, தெலுங்கு ஆகிய பாடத் தேர்வுகளும் பிப்ரவரி 23&ஆம் நாள் நடைபெற இருப்பதால் தமிழ் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கலை இந்த பாடங்களின் மாணவர்களும் எதிர்கொள்வர்.
எனவே, தமிழ் பாடத் தேர்வுக்கு முன்னும், பின்னும் குறைந்தது 3 நாள்கள் இடைவெளி இருப்பதைப் போல தேர்வு அட்டவணையை மத்திய இடைநிலை கல்வி வாரியம் மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சி.பி.எஸ்.இ தயாரித்துள்ள தேர்வு அட்டவணையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என்பதால், இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு, தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப் பட்டுள்ள அநீதியை போக்க வேண்டும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் வலியுறுத்த வேண்டும்”
என்று தெரிவித்துள்ளார்.