For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தொடர்பான வழக்கு : உரிமையாளரின் மனைவி கார்த்திகா கைது!

04:21 PM Dec 14, 2023 IST | Web Editor
பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தொடர்பான வழக்கு   உரிமையாளரின் மனைவி கார்த்திகா கைது
Advertisement

பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தொடர்பான வழக்கில் அந்நிறுவன உரிமையாளரின் மனைவி கார்த்திகா திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரணவ் ஜுவல்லரி இயங்கி வந்தது. இதன் இயக்குநர்களாக திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா இருந்து வந்தனர்.

குறிப்பாக, ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 2 சதவீதம் வட்டி வழங்கப்படும் எனவும் அப்படியில்லை என்றால் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்க நகைகளை 10 மாதங்கள் கழித்துப் பெறலாம் என்றும் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டனர். இது மட்டுமின்றி 11 மாதம் சீட்டு கட்டினால் 12-ம் மாத தவணையை இலவசம் என்றும் அறிவித்தனர்.

இதனை நம்பி ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்திய நிலையில், கடந்த மாதம் பிரணவ் ஜுவல்லர்ஸ் அனைத்து நகைக் கடைகளும் மூடி, அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகினர். ரூ.100 கோடி அளவுக்கு நடந்த இந்த மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார், கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி அந்தக் கடைக்கு சொந்தமான இடங்களில் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தினர்.

ப்ரணவ் ஜுவல்லர்ஸ் நிர்வாகத்தினர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக அமலாக்கத் துறையினர் புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்து, தமிழ்நாடு முழுவதும் அந்த கடைக்கு தொடர்புடைய சுமார் 11 இடங்களில் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத 11.60 கிலோ தங்க நகைகள், ரூ.23.70 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து மோசடி புகாரில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நகை சேமிப்பு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மதன் செல்வராஜின் மனைவி கார்த்திகா திருச்சியில் இன்று கைது செய்யப்பட்டார். 

Tags :
Advertisement