சிறுவனை கொன்று பீரோவில் மறைத்து வைத்த வழக்கு - குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடியப்பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் ரிச்சார்ட். இவர் வெளி நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி சகாய சில்ஜா. இவர்களது மகன் ஜோஹான் ரிஷி (4). இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். ஜான் ரிச்சார்ட் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் சகாய சில்ஜா குழந்தைகளுடன் கடியப்பட்டணம் பகுதியில் உள்ள வீட்டில் தனியே வசித்து வருகிறார். இந்த சூழலில், கடந்த 21.01.2022 அன்று வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் ஜோகன் ரிஷி திடீரென மாயமானார்.
இதனால் பதறிப்போன தாய் சகாய சில்ஜா சிறுவனை பல இடங்களில்
தேடினார். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். இதற்கிடையே சிறுவனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாத்திமா என்ற பெண் அந்த பகுதியில் உள்ள நகை அடகு கடையில் நகையை அடகு வைக்க சென்றார். அவர் மீது சந்தேகம் அடைந்த கடைக்காரர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பின்பு போலீசார் பாத்திமாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சிறுவனை கொலை செய்ததை பாத்திமா ஒப்புக் கொண்டார்.
தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோவில் கை மற்றும் வாயில் துணியால் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் பிணமாக இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுவன் கழுத்து மற்றும் கையில் சுமார் ஒன்றரை பவுன் தங்க நகைகள் (5.980 கிராம் செயின் மற்றும் 3.30 கிராம் பிரேஸ்லெட் ) அணிந்திருந்ததால் பாத்திமா நகைக்காக சிறுவனை கடத்தினார். பின்னர் நகைகளை திருடி விட்டு சிறுவனின் வாயை துணியால் கட்டி கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் பாத்திமாவின் கணவருக்கும் சம்பந்தம் இருந்ததும் கண்டறியப்பட்டது.
அப்போது குளச்சல் காவல் ஆய்வாளராக இருந்த அருள் பிரகாஷ் கூடுதல் பொறுப்பாக மணவாளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளராக இருந்ததால் அவர் குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி வந்தார். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட சிறுவன் காணவில்லை என்ற முதல் தகவல் அறிக்கையில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 34,201,302,342,364,369,379 என்று சட்டப்பிரிவுகளை மாற்றம் செய்து குற்றவாளிகளை கைது செய்து வழக்கில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞராக ஜெகதேவ் ஆஜராகி வாதாடினார். இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று (ஜுன் 4) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் முதல் குற்றவாளியான பாத்திமாவுக்கு ஆயுள் தண்டனையும் இரண்டாவது குற்றவாளியான அவரது கணவருக்கு சடலத்தை மறைக்க உதவிய குற்றச்சாட்டின் கீழ் மூன்று ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.