“கும்பமேளா துயரத்தை குற்றம் சாட்ட முடியுமா?” - பெங்களூர் அணி வெற்றி பேரணியின்போது ஏற்பட்ட சோகம் குறித்த பாஜகவின் குற்றச்சாட்டுக்கு எதிராக சித்தராமையா கேள்வி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் அணி முதன் முறையாக நேற்று (ஜுன்.03) கோப்பையை வென்றது. இதையடுத்து இன்று மாலை சின்னசாமி மைதானத்தில் வெற்றிப் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் 11 பேர் உயிரிழந்தனர். இது குறித்து கர்நாடகாவில் உள்ள பாஜக கட்சியினர் பாதுகாப்பு குறைபாடு என ஆளும் காங்கிரஸ் அரசு மீது குற்றம் சாட்டி வந்தது.
இந்த நிலையில் பாஜகவுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “இந்த துயர சம்பவத்தில் 39 பேர் காயமடைந்தனர். 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கூடினர், விதான் சவ்தாவில் எந்த வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. சின்னசாமி மைதானத்தில் 2 லட்சத்துக்கும் மேல் கூட்டம் கூடியதால் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. சின்னசாமி மைதானத்தில் 35,000 பேர் அமரும் வசதி உள்ளது. அரசும், கிரிக்கெட் வாரியமும் இவ்வளவு கூட்டம் கூடும் என எதிர்பார்க்கவில்லை.
வைதேகி மருத்துவமனை, பவுரிங் மருத்துவமனைக்கும் நேரில் சென்றேன். பலியான பெரும்பாலானோர் இளைஞர். 11 பேர் உயிரிழந்து உள்ளனர், இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் வழங்கப்படும். காயமடைந்த அணைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அணைவருக்கும் சிகிச்சை செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். மொத்தம் 47 பேர் காயம் அதில் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். காயமடைந்தவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நபர்களுக்கு உணவு, முதல் போக்குவரத்து வரை அனைதையும் அரசு ஏற்றுக்கொள்ளும்.
உயிரிழந்தவர்கள் ஆத்மா சாந்தி அடைய அரசு பிரார்த்திக்கிறது. இறந்தவர்கள் அனைவரும் இளம் வயதினர், அதில் சில மாணவர்களும் உள்ளனர். இறந்தவர்கள் குடும்பத்துக்கு கடவுள் மத தைரியத்தை கொடுக்க வேண்டும். நீதி விசாரணைக்கு உத்தரவிடுகிறோம். விசாரணை முடிந்து யார் மீது தவறு உள்ளதோ? அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியல் செய்ய விரும்பவில்லை, பாஜக செய்யும் அரசியலுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. எதிர்பாராத சம்பவமாக இருந்தாலும் நீதி விசாரணைக்கு உத்தரவிடுகிறோம். மைதானத்தின் வழிகள் குறுகியது, கூட்டம் அதிகம் கூடியதால் இந்த துயர சம்பவம் நடந்து உள்ளது. பாதுகாப்பு குறைபாடா? அல்லது வேறு காரணமா? என அறியவே இந்த நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சி நடத்த விவாதித்தபோது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எதிர்ப்பை மீறி நிகழ்ச்சி நடத்தியதாக சிலர் கூறி வருகின்றனர். எதிர்பாராத நேரத்தில் அதிக கூட்டம் கூடியதால் நடந்த விபத்தாக கருதுகிறேன். கும்பமேளாவில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதை குற்றம்சாட்ட முடியுமா?. கர்நாடகா கிரிக்கெட் அசோசியேசன் தான் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரினார்கள். நாங்கள் அனுமதி கொடுத்தோம். நாங்கள் அழைக்கவில்லை”
இவ்வாறு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.