இடைத்தேர்தல் முடிவுகள்; பாஜகவின் மாயவலை அறுக்கப்பட்டுள்ளது -ராகுல் காந்தி!
பாஜகவின் மாயவலை அறுக்கப்பட்டுள்ளது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில், மேற்கு வங்கம், உத்தராகண்ட், பிஹாரின் சில இடங்களைத் தவிர அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் ஆணையத்தின் தகவல்படி தமிழகத்தின் விக்கிரவாண்டியில் அதிக அளவிலும், உத்தராகண்டின் பத்ரிநாத்தில் குறைந்த அளவிலும் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன.
2024 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடந்த இந்த முதல் இடைத்தேர்தல்களில் என்டிஏ-வுக்கும், இண்டியா கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவியது. இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், காலை முதலே பெரும்பாலான தொகுதிகளில் இண்டியா கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. இந்த நிலையில், இடைத்தேர்தல் நடந்த மொத்தம் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 10 இடங்களை இண்டியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. என்டிஏ 2 இடங்களில் வென்றுள்ளது. ஓர் இடத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 10-ல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பாஜக பின்னியிருந்த ‘மாய வலை அறுந்துவிட்டது என்பதையே 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், ஊழியர்கள் என ஒவ்வொரு வர்க்கமும் சர்வாதிகாரத்தை முற்றிலுமாக அழித்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புகிறது. பொதுமக்கள் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காகவும் இண்டியா கூட்டணியுடன் முழுமையாக நிற்கின்றனர். ஹிந்துஸ்தான் வாழ்க! இந்திய அரசியலமைப்பு வாழ்க!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.