எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... சென்னையில் பரபரப்பு!
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சில வாரங்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். அதில், மிரட்டல் விடுக்கப்பட்டது புரளி என தெரியவந்தது. தொடர்ந்து, அண்மையில் சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : “மாநில உரிமைக் காப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் போலீசார் நடத்திய தீவிர சோதனையில் அதுவும் புரளி என தெரியவந்தது. இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு இன்று (ஜுன் 10) மீண்டும் மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் அங்கு தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், வெடி குண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதேபோல், சென்னை உயர்நீதிமன்றம், சிபிஐ நீதிமன்றத்திற்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.