மக்களவைத் தேர்தலில் 370 இடங்களுக்கு மேல் பாஜக கைப்பற்றும் - பிரதமர் மோடி பேச்சு!
2024 மக்களவை தேர்தலில் பாஜக தனித்து 370 இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று (பிப். 11) சென்றார். ஜபுவா மாவட்டத்தில் 7,550 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாஜக மட்டும் தனித்து 370 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்தார். மேலும் தனக்கும் தனது கட்சிக்கும் பழங்குடி சமூகம் என்பது வாக்கு வங்கி அல்ல, அது நாட்டின் பெருமை என்றும் பிரதமர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி மத்திய பிரதேசத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக வரவில்லை என்றும் மக்களுக்கு சேவை செய்ய வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் கூறியதாவது,
“என்னுடைய இந்த மாநில பயணம் குறித்து நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. பல்வேறு விஷயங்கள் பேசப்படுகின்றன. சிலர், மோடி மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஜபுவாவில் இருந்து தொடங்குகிறார் என்று கூறுகிறார்கள். ஆனால் நான் இங்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வரவில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் இங்கு வந்திருக்கிறேன்.
முந்தைய தேர்தல்களை விட ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கூடுதலாக 370 வாக்குகள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். பாஜக 370 லோக்சபா இடங்களைப் பெற வேண்டும். பாஜகவை பொறுத்தவரை பழங்குடி சமூகம் என்பது வாக்கு வங்கி அல்ல. அவர்கள் நமது நாட்டின் பெருமை. குறிப்பாக பழங்குடியின சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட 6 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்திற்கு சென்றுள்ளது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது” இவ்வாறு தெரிவித்தார்.