விஜயகாந்த் உடலுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அஞ்சலி!
தேமுதிக தலைவரும் முன்னாள் எதிர்கட்சித்தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை அடுத்து அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் நாளை மாலை இறுதி மரியாதை நடைபெறும் என தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதுமிலிருந்து அவரது ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்துக்கு படையெடுத்து வருகின்றனர்.
அதே போன்று திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித்தலைவர்களும் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பலர் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அலையலையாய் வந்து அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விஜயகாந்தின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது:
இது சோகமான சூழ்நிலை. மிகப் பெரிய மனிதன் அவர். சினிமா துறையில் முத்திரை பதித்தவர் விஜயகாந்த். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என எல்லா தொழில்களில் சிறந்து விளங்கியவர். அஞ்சலி செலுத்துவதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். உயிரிழந்த விஜயகாந்தின் உடலை பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்க வேண்டும். நாளை பொதுமக்கள் அதிகமாக அவருக்கு அஞ்சலி செலுத்து வருவார்கள். பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயகாந்த்திற்கு ஒரு மணி மண்டபம் கட்ட வேண்டும். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது நாளை ராஜாஜி மன்றத்திற்கு அவர் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக மாற்ற வேண்டும். இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.