“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் நாளில் பாஜக அரசியல் முடிவுக்கு வரும்” - ராகுல் காந்தி விமர்சனம்!
பிரதமர் மோடி தலைமையில் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அடுதாண்டு நடைபெறள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நடக்கவுள்ள இந்த சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்றன.
இருப்பினும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலர், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான கால வரையறையை பாஜக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறி வந்தனர்.
இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் நாளில் பாஜக அரசியல் முடிவுக்கு வரும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். பீகார் சென்றுள்ள ராகுல் காந்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது, “எனது நோக்கம் சாதி கணக்கெடுப்பு. மக்களவையில், பிரதமர் மோடியின் முன்னிலையில், சாதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று நான் அவரிடம் சொன்னேன்.
அவருக்கு சரணடையும் பழக்கம் இருப்பது உங்களுக்குத் தெரியும். நரேந்திர மோடியை சரணடையச் செய்ததாக டிரம்ப் 11 முறை பகிரங்கமாக கூறினார். ஆனால் மோடி, அது குறித்து ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாது, ஏனெனில் அது உண்மை. அவர்கள் ஒருபோதும் உண்மையான சாதி கணக்கெடுப்பை செய்ய மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அதைச் செய்த நாளில் அவர்களின்(பாஜக) அரசியலும் முடிவுக்கு வரும்”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.